இப்படியும் சோகம்.. வீட்டில் கழிவறை கட்ட பெற்றோர் மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை!
ராஞ்சி: வீட்டில், கழிவறை கட்டாததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஜார்கண்டில் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண் குஷ்பு குமாரி. கல்லூரியொன்றில் முதலாமாண்டு பி.ஏ படித்து வந்தார்.
நாட்டில் 53.1 சதவீதம் பேர் வீட்டில் கழிவறையில்லை என்று நேற்று வெளியான சென்சஸ் தகவல் கூறியது. அதில் ஒரு வீடுதான் குஷ்பு குமாரியுடையதும்.
சிறுவயது முதலே காலைக் கடனை கழிக்க, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டு பகுதிக்கு செல்வது குஷ்பு குமாரி வழக்கம். ஆனால், தற்போது கல்லூரி செல்ல தொடங்கியது முதல், வீட்டில் கழிவறை கட்டுமாறு, பெற்றோரை வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால் பெற்றோரோ, கழிவறைக்கு பதிலாக, சுற்றுச்சுவர் அமைத்து தருகிறோம். அதற்குள் காலைக்கடனை கழித்துக் கொள் என்று கூறிவிட்டனராம். இதனால், சற்று தள்ளியுள்ள தனது தாத்தா வீட்டு கழிவறையை குஷ்பு குமாரி பயன்படுத்தி வந்துள்ளார்.
இருப்பினும் பெற்றோர் அசைவதாக இல்லை என்பதை தெரிந்து கொண்ட குஷ்பு குமாரி, நேற்று தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.