டார்ஜிலிங்கில் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு: 18 பேர் பலி, 15 பேர் மாயம்
சிலிகுரி: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் குர்சியோங் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து கனமழை பெய்தது. இதனால் டார்ஜிலிங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் 18 பேர் பலியாகியுள்ளனர்.
நிலச்சரிவால் டார்ஜிலிங்கில் இருந்து சிக்கிம் செல்லும் சாலை, தேசிய நெடுஞ்சாலைகள் கடும் சேதம் அடைந்துள்ளன. மேலும் தொலைத்தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங் மாவட்டத்தில் 25 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கலிம்போங் பகுதியில் 15 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. சிக்கிம், கலிம்போங், லாவா, லோலேகாவ்ன் மற்றும் கருபதன் ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 10 கடும் சேதம் அடைந்துள்ளது.
நிம்புஜோரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 55ல் உள்ள பாலம் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கலிம்போங், டார்ஜிலிங் மற்றும் மிரிக் ஆகிய பகுதிகளில் இருந்து இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.