1962 சீனா யுத்தம்... அமெரிக்காவை போர் களத்துக்கு அழைத்த 'சமாதானப் புறா' நேரு- ப்ளாஷ்பேக்
1962-ல் சீனாவின் மூர்க்கத்தனமான யுத்தத்தால் சமாதானப் புறா என்று போற்றப்பட்ட ஜவஹர்லால் நேரு அமெரிக்காவை போர்க் களத்துக்கு துணைக்கு அழைத்தார்.
டெல்லி: சமாதானப் புறா என்று அழைக்கப்பட்ட நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை அமெரிக்காவிடம் ஆயுத உதவியை கோர வைத்தது சீனாவின் மூர்க்கத்தனமான 1962-ம் ஆண்டு யுத்தம்.
1950களில் இருந்தே சீனா இந்தியாவுக்கு குடைச்சலைக் கொடுக்க தொடங்கியது. சீனா வெளியிட்ட வரைபடங்களில் இந்திய பகுதிகளிலும் இடம்பெற்றிருந்தன.
இதற்கு நேரு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அத்துடன் அந்த எல்லைப் பகுதிகளில் ராணுவ நிலைகளையும் புதியதாக உருவாக்கினார். இது சீனாவை கடும் கோபம் கொள்ள வைத்தது.
இந்த நிலையில் திபெத்தை சீனா ஆக்கிரமிக்க தலாய்லாமாவுக்கு இந்தியா செங்கம்பள வரவேற்பு கொடுத்தது. இதை சீனா கொஞ்சமும் ரசிக்கவில்லை.
அதேபோல் அப்போதைய பிரதமர் நேரு, சீனா நம்மீதெல்லாம் போர் தொடுத்துவிடாது என நம்பினார். ஆனால் நிலைமையோ மோசமாகிப் போனது. திடீரென எல்லைகளை தாக்கி சீனா விறுவிறுவென முன்னேறியது.
சீனாவின் மூர்க்கத்தனமான முன்னேற்றத்தை தடுக்க முடியாமல் நமது வீரர்கள் பின்னடைவை சந்தித்தனர். ஒருகட்டத்தில் கொல்கத்தா கூட சீனா வசம் வீழ்ந்துவிடுமோ என்கிற அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.
இந்த யுத்தம் இந்தியாவுக்கு மிக மோசமான தோல்வியைத் தந்தது. இத்தோல்வி தொடர்பான அரசின் ரகசிய ஆவணங்களை சில ஆண்டுகளுக்கு முன்னர் 1962-ம் ஆண்டு போரின் போது டெல்லியில் பணியாற்றிய ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் மேக்ஸ்வெல் திடீரென வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
- இந்திய ராணுவம் போதுமான பலத்தைக் கொண்டிருக்கவில்லை.. போரின் போது ராணுவ தளபதிகள் பாராட்டும்படியாக எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.
- ஒட்டுமொத்த சீனாவின் ஊடுருவலை முறியடிக்கும் வகையிலான திட்டமும் வகுக்கப்படவில்லை.
- ரகசிய கூட்டங்கள்,, எல்லைப் பகுதிகளில் அதிகளவில் ராணுவ முகாம்களை அமைக்கவும், அங்கு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், ராணுவ தலைமையகமும், இந்திய புலனாய்வு இயக்குனரும் சேர்ந்து முடிவு செய்தனர். இது தொடர்பாக பலமுறை ரகசிய கூட்டம் நடைபெற்றது.
- ஆனால் ராணுவ புலனாய்வு அமைப்பினரோ, புதிய ராணுவ நிலைகளை அமைத்தால் நிச்சயம் அதை சீனா தடுத்து தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்திருந்தது.
- சீனா நம் மீது தாக்குதல் நடத்திய காலத்தில் ஆயுத பலமின்மை, ஆட் பலமின்மை போன்ற பல குறைபாடுகள் குறித்து ஜெனரல் கெளல் 1961-62ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமது அறிக்கையில் பல முறை அரசுக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
- பாதுகாப்பு அமைச்சகத்தின் நெருக்குதலால் பலமற்ற நிலையிலும் சீன படைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் இருந்தனர்.
- களநிலைமையை புரிந்து கொள்ளாமல் வெறும் ஆலோசனைக் கூட்டங்களில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதன் மூலம் பெரும் பின்னடைவை எதிர்கொள்ளவும் நேரிட்டது.
- சீனாவுடனான 1962-ம் ஆண்டு போரில் இந்தியா தோற்றுவிடுவோம் என்பதுதான் யதார்த்தமான நிலையாக இருந்தது. ஆனாலும் இந்த யதார்த்ததைப் புரிந்து கொள்ளாமல் நேரு போரில் ராணுவத்தை ஈடுபட வைத்தார்.
அதேபோல் சீனாவுடனான யுத்தத்தின் போது அமெரிக்கா அதிபர் ஜான் கென்னடியிடம் நாட்டின் பிரதமராக இருந்த நேரு உதவி கோரி கடிதங்கள் அனுப்பினார். அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் அதிகாரி புரூஸ் ரீடெல் JFK's Forgotten Crisis: Tibet, the CIA and the Sino-Indian War'" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டார்.
Recommended Video
அதில் இடம்பெற்றிருந்த அம்சங்கள்:
- மூன்றாம் உலக நாடுகளின் தலைவராக நேரு உருவெடுப்பதை சகிக்க முடியாததால் சீனாவின் மாவோ 1962ஆம் ஆண்டு இந்தியாவுடன் யுத்தத்தை நடத்தினார்.
- மாவோவின் பிரதான இலக்காக நேருதான் இருந்தார்.
- போரில் இந்தியாவை தோற்கடித்ததன் மூலம் தனது எதிரிகளான ரஷ்ய அதிபர் குருசேவ், அமெரிக்கா அதிபர் கென்னடி ஆகியோருக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக கருதினார் மாவோ.
- சீனாவுடனான போரில் இந்தியா தமது பிரதேசங்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
- போர் விமானங்களை அனுப்பி உதவுமாறு அமெரிக்கா அதிபர் கென்னடிக்கு நேரு கடிதம் அனுப்பியிருந்தார்.
- அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மூலம் 1962ஆம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி மற்றொரு கடிதமும் கென்னடிக்கு அனுப்பி வைத்திருந்தார் நேரு.
- சீனாவுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்காவும் இணைந்து போரிட வேண்டும் என்று நேரு அழைப்பு விடுத்திருந்தார்.
- இந்தியாவுக்கான அமெரிக்கா தூதரும் வெள்ளை மாளிகைக்கு இது தொடர்பாக தந்தி ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.
- நேரு மொத்தம் 12 போர் விமானங்களை கோரியிருந்தார். எங்களிடம் அதிநவீன ரேடார்கள் இல்லை. ஆகையால் அமெரிக்கா தமது நவீன ரேடார்களையும் போர் விமானங்களையும் வழங்க வேண்டும் எனவும் நேரு கோரிக்கை விடுத்திருந்தார்.
- அமெரிக்கா வழங்கும் போர் விமானங்களை நிச்சயம் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தமாட்டோம் எனவும் நேரு உறுதியளித்திருந்தார்.
- போர் விமானங்களை இயக்குவதற்கு 10,000 ராணுவ வீரர்கள் தேவை எனவும் நேருவின் கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
- ஆனால் நேருவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா போர்க்களத்துக்கு வருவதற்கு முன்னரே சீனா யுத்த நிறுத்தத்தை அறிவித்துவிட்டது.
- இங்கிலாந்தும் கூட நேருவின் கோரிக்கையை ஏற்று போருக்கு வர தயாராக இருந்தது. சீனாவின் யுத்த நிறுத்த அறிவிப்பு உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
- அந்த யுத்தத்தில் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும் கைப்பற்றி கொல்கத்தாவை நோக்கி சீனா நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் திடீரென யுத்த நிறுத்த அறிவிப்பை சீனாவே வெளியிட்டது.