பீகாரில் 2,600 ஆண்டுகால பழமையான மகாவீரர் சிலை திருட்டு- நிதிஷ்குமாருடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை!
பாட்னா: பீகாரில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய புராதான மகாவீரர் சிலை திருட்டு போன சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.
பீகாரின் ஜமோய் மாவட்டத்தின் லாசூர் கிராமம் அருகே உள்ள ஜைன மத கோயில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 250 கிலோ எடையுள்ள 2,600 ஆண்டுகால பழமை வாய்ந்த மகாவீரர் சிலை கடந்த வெள்ளியன்று திருடு போனது.
கருங்கற்களால் ஆன அந்த மகாவீரர் சிலையை தொல்லியல் துறை பராமரித்து வந்தது. இருப்பினும் அதற்கு எந்த ஒரு போலீஸ் பாதுகாப்பும் அதற்கு போடப்படாமல் இருந்தது.
இச்சம்பவம் ஜைன மதத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அரசிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இச்சம்பவம் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார். மேலும் தீவிர விசாரணை நடத்தவும் அவர் கேட்டுக் கொண்டார்.