காட்டுக்குள் தண்ணீர் இல்லாமல் நா வறண்டு 2 சிறுவர்கள் பலி... திருமணத்திற்கு போன போது சோகம்!
ஹைதராபாத்: கடும் வறட்சி வாட்டி வரும் தெலுங்கானாவில் திருமண விழாவிற்கு சென்ற இரண்டு சிறுவர்கள், தண்ணீர் கிடைக்காததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டைவிட இம்முறை தெலுங்கானாவில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. அதிகபட்சமாக நேற்று கரிம் நகரில் 115 டிகிரி வெப்பநிலை பதிவானது. வெயிலின் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர். அதோடு பல இடங்களில் கடுமையான வறட்சியும் காணப்படுகிறது.
தெலுங்கானாவில் உள்ள அகிலாபாத் மாவட்டம் லிங்கப்பள்ளி கிராமத்தில் குடிக்க தண்ணீர் கிடைக்காததால் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
லிங்கப்பள்ளியில் இரண்டு மகள்கள் மற்றும் மகன்களுடன் வாழ்ந்து வந்தவர் லட்சுமி. இவர்களது உறவினர் மகளுக்கு புத்தாரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. அவர்களது குல வழக்கப்படி திருமணத்துக்கு முன்பு மணப்பெண்ணை மாப்பிள்ளை வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதில் கலந்து கொள்ள லட்சுமி தனது மகன்கள் மதிக்கர் (12), அசோக் (8) ஆகியோருடன் லிங்கப்பள்ளியில் இருந்து காட்டு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது வழியில் சிறுவர்கள் இருவருக்கும் வெயில் காரணமாக கடுமையான தாகம் எடுத்துள்ளது. இதனால் சோர்வுற்ற அச்சிறுவர்கள் அங்கேயே அமர்ந்து விட்டனர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த லட்சுமி, தண்ணீர் தேடி காட்டுக்குள் அலைந்துள்ளார். ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் லட்சுமியும் களைப்பில் மயங்கி விழுந்தார். இதற்கிடையே தாகத்தில் தவித்த 2 சிறுவர்களும் மயங்கி சுருண்டு விழுந்தனர்.
லட்சுமியும், அவரது மகன்களும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, அவர்களை மீட்டு அந்த வழியில் வந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அந்த இரண்டு சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து லட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகமடைந்தனர்.