கோவாவில் சுயேச்சைகள், சிறுகட்சிகள் காட்டில் மழை.. அமைச்சரவையில் அள்ளிக்கொடுத்த பாஜக
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் சுயேச்சைகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் நல்ல டிமாண்ட் உள்ளது.
பானாஜி: கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியானது. அதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றுள்ளன.
இதனால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. 40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவாவில் ஆட்சி அமைக்க 21 பேரின் ஆதரவு தேவை.
இதற்காக கோவா முன்னணிக் கட்சி, எம்ஜிபி கட்சி, சுயேச்சைகள் ஆகியோரை தங்கள் வசம் இழுத்து அவர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் முயற்சித்தன. இதில் பாஜக வென்றது.
முதல்வராக பாரிக்கர்
இதையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் முதல்வராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவா சட்டசபை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குழு தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தலைமை நீதிபதி பெஞ்ச்
இதை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஹேகர் தலைமையிலான பெஞ்ச், கோவா சட்டசபையில் 16ம்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும், அதில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இன்று பதவியேற்பு
அதேவேளை, மனோகர் பாரிக்கர் முதல்வராக இன்று பதவியேற்பதற்கு தடை கோர முடியாது என்றும் அந்த பெஞ்ச் தெரிவித்துள்ளது. இதனால் மாலை 5 மணிக்கு கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்கிறார்.
அமைச்சரவை
ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதற்கு பிரதி உபகாரமாக, கோவா அமைச்சரவையில் 2 சுயேச்சைகளுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கோவா ஃபார்வேர்ட் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களுக்கும் கேபினெட்டில் இடம் கொடுக்கப்படுகிறதாம்.
பாஜகவை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்கிறார்கள்.
காட்டில் மழை
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் சுயேச்சைகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் நல்ல டிமாண்ட் உள்ளது. எனவே அமைச்சர் பதவியிடங்களை கொடுத்து அவர்களை பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.