வட மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கன மழை- மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி
சந்தேல்: மணிப்பூர் மாநிலத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 20 பேர் பலியாகினர். மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அங்குள்ள ஆறுகளிலும், நீர் நிலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், சந்தேல் மாவட்டத்தில் மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஜவ்மோல் என்ற கிராமத்தில் சனிக்கிழமை மாலை திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த கிராமத்தின் பல்வேறு பகுதிகள் மணலில் மூழ்கின. இந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்புக் குழுவினர் ஜவ்மோல் கிராமத்துக்கு விரைந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலையில்தான் அவர்கள் அப்பகுதிக்கு செல்ல முடியும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நிலச்சரிவு தொடர்பாக மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தார். அப்போது மணிப்பூருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், "மணிப்பூரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படைகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுவர்" என்றார் அவர்.
இந்நிலையில், மணிப்பூரில் வெள்ள நிலவரத்தை பார்வையிடுவதற்காக கிரண் ரிஜிஜு வரும் வாரம் அந்த மாநிலத்துக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 மாவட்டங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாலும், தண்டவாளங்கள் வெள்ளத்தில் மிதப்பதாலும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் குஜராத்தின் பூஜ் மாவட்டம், ராஜஸ்தானின் சிர்பதியா, தனேரா, சங்கோர் ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத் தொடர்ந்து ராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் நடைபெறுகிறது. ராணுவத்தினர் இதுவரை 2 மாநிலங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர்.