2002ல் விபத்து ஏற்படுத்திய வழக்கில் புதிய திருப்பம்: திடீர் என புது கதை சொல்லும் சல்மானின் டிரைவர்
மும்பை: 2002ம் ஆண்டு நடிகர் சல்மான் கான் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றிய வழக்கில் புது திருப்பம் ஏற்படுத்துள்ளது. காரை தான் ஓட்டியதாக சல்மானின் டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு செம்டம்பர் மாதம் 28ம் தேதி இரவு மும்பை பந்த்ரா பகுதியில் காரை ஓட்டிச் சென்ற பாலிவுட் நடிகர் சல்மான் கான் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது வாகனத்தை ஏற்றிவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது சல்மான் கான் வீட்டில் 1990ம் ஆண்டில் இருந்து பணிபுரியும் டிரைவர் அசோக் சிங் நீதிமன்றத்தில் ஆஜராகி சம்பவம் நடந்த அன்று நான் தான் காரை ஓட்டினேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவ்வாறு வாக்குமூலம் அளிக்க தனக்கு யாரும் பணம் அளிக்கவில்லை என்றும் சிங் தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகளும் விசாரணையின்போது சல்மான் தான் காரை ஓட்டியதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் என சல்மான் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜரானபோது தனது டிரைவர் அசோக் சிங் தான் காரை ஓட்டினார் என்று முதல்முறையாக தெரிவித்தார். இதையடுத்து அசோக் சிங் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அசோக் சிங் பகல் நேரத்தில் சல்மான் கானுக்கு கார் ஓட்டுபவர். இத்தனை ஆண்டுகளில் அவர் பெயரை தெரிவிக்காத சல்மான் தற்போது திடீர் என்று கூறுவது விந்தையானது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பிரதீப் கரத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் பற்றி அசோக் சிங் நீதிமன்றத்தில் கூறுகையில்,
நான் செய்த விபத்துக்காக சல்மான் கான் கஷ்டப்பட்டு வருகிறார். விபத்து நடந்த உடனே நான் போலீசாரிடம் நடந்ததை தெரிவிக்க விரும்பினேன். ஆனால் அவர்கள் என்னிடம் வாக்குமூலம் வாங்க மறுத்துவிட்டனர். நான் காரை ஓட்டுகையில் இடதுபக்க டயர் வெடித்தது. இதையடுத்து நான் காரை நிறுத்த முயன்றும் முடியாமல் அது சாலையோரம் இருந்தவர்கள் மீது ஏறியது. விபத்து நடந்த உடனே நான் பந்த்ரா காவல் நிலையம் சென்று தகவல் தெரிவித்தேன். அதிகாலை 4.30 மணி வரை நான் அங்கு காத்திருந்தும் அவர்கள் என்னிடம் வாக்குமூலம் வாங்க மறுத்துவிட்டனர். மீடியாவிடம் எதுவும் கூற முடியவில்லை. நான் எப்படி போலீசாருக்கு எதிராக பேச முடியும்? என்றார்.