மின் தடையால் விபரீதம்.. ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 21 நோயாளிகள் சாவு!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒன்றில் ஒரே நாளில் நோயாளிகள் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் இந்த சம்பவம் வெள்ளிக் கிழமை நிகழ்ந்துள்ளது. அந்த மருத்துவமனையில் அடிக்கடி மின்தடை மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக் கிழமை மட்டும் 21 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளின் உயிரிழப்பிற்கு மின்தடையே முக்கிய காரணம் என மருத்துவ ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றை நாடியிருந்த பலர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
மதியம் சுமார் 3 மணியளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சீரான இடைவெளியில், மின்தடை தொடர்ந்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் 4 ஜெனரேட்டர்கள் இருந்தபோதிலும், மின் தடைக்கான காரணத்தை கண்டுபிடிக்க அவற்றை இயக்க முடியவில்லையாம். இதனால் மருத்துவமனையின் பல முக்கிய வார்டுகளில் இருந்த நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், சிலர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தெலுங்கான அரசு மருத்துவ சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ரகு கூறியதாவது: கடந்த 14 வருடமாக இந்த மருத்துவமனையில் நான் பணிபுரிந்து வருகிறேன். தினமும் சராசரியாக 10 பேர் உயிரிழந்து வருகின்றனர் என்று கூறினார்.
மருத்துவமனை கண்காணிப்பாளரான பேராசிரியர் சி வி சாலம் கூறியதாவது: உயிரிழந்த 21 பேரையும் குறித்து விசாரணை நடத்த வேண்டும், எனெனில் உயிரிழப்பிற்கும், மின் தடைக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருக்கலாம் என்று கூறினார். மருத்துவமனையில் 3 கட்ட மின் இணைப்பு இருந்தபோதிலும், அனைத்து இணைப்பிலும் அடிக்கடி மின்சாரத் தடை ஏற்பட்டு வந்தது. இதனை சமாளிப்பது ஊழியர்களுக்கு கடினமாக இருந்தது.
மருத்துவர் ஒருவர் கூறியதாவது: 28 வயதான ஒரு நபருக்கு அவசர குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எனது செல்போன் டார்ச்சை வைத்தே அறுவை சிகிச்சை செய்தேன் என்று கூறினார்
தென்னக மின் விநியோக நிறுவன லிமிடெட் செகந்தராபாத் மண்டல பொறியாளர் ராஜா ராம் ரெட்டி இது குறித்து கூறியதாவது: வெள்ளிக் கிழமை மின்தடை பிரச்சனை ஏற்பட்டது உண்மை தான். ஆனால், மருத்துவமனையில் வைத்துள்ள ஜெனரேட்டரில் பிரச்சனை இருப்பது குறித்து எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.