வறுமையில் அல்லாடும் 21.5 கோடி இந்தியர்கள்: அரசு ஒதுக்கிய நிதி எங்கே?
டெல்லி: இந்தியாவில் வசிக்கும் 21.5 கோடி பேரிடம் சொத்துக்கள் என்பதே இல்லை என்று தெரிய வந்துள்ளது.
ஏழைகளுக்காக பாடுபடுகிறோம் என்று அரசியல் கட்சிகள் பிரச்சார மேடை தோறும் கூறி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் வசிக்கும் 21.5 கோடி பேரிடம் சொத்துக்கள் எதுவும் இல்லை என்று இந்தியாஸ்பெண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை சேர்த்தால் இந்தியாவில் சொத்துக்கள் இல்லாதவர்களின் எண்ணிக்கை கிடைக்கும்.
டிவி, செல்போன்
சொத்துக்கள் என்றால் வீடு வாசல் இல்லை அவர்களிடம் டிவி, இரு சக்கர வாகனம், ரேடியோ, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கூட இல்லை.
சென்சஸ் தகவல்
43 மில்லியன் வீடுகளில் வசிப்போருக்கு சொத்துக்கள் இல்லை என்று சென்சஸ் தகவல் தெரிவித்துள்ளது. ஒரு வீட்டில் சராசரியாக 5 பேர் வசிக்கிறார்கள் என்று கணக்கிட்டால் 21.5 கோடி இந்தியர்களிடம் சொத்துக்கள் இல்லை.
ஆதிவாசிகள்
சொத்து எதுவும் இல்லாதவர்களில் சுமார் 80 மில்லியன் பேர் ஆதிவாசி மக்கள். ஆதிவாசிகளுடன் ஒப்பிடுகையில் தலித்துகள், முஸ்லீம்களின் நிலை பரவாயில்லை.
கல்வி
ஆதிவாசிகளில் 60 சதவீதத்திற்கும் குறைவானவர்களே படித்துள்ளனர். ஆதிவாசிகளில் வெறும் 40 சதவீதம் பேர் மட்டுமே ஒழுங்கான வீடுகளில் வசிக்கிறார்கள்.
அரசு
ஆதிவாசிகள், தலித்துகள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியை அரசு செலவு செய்வது இல்லை. அந்த பணத்தை மாநில அரசுகள் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்துவதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். 2014-2015ம் நிதியாண்டில் பட்ஜெட்டில் பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ரூ. 82 ஆயிரத்து 935 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
நிதி
பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி கடந்த 4 ஆண்டுகளில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. 2011-2012ம் நிதியாண்டில் ரூ. 76 ஆயிரத்து 206 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு 2014-2015ம் ஆண்டில் ரூ. 82 ஆயிரத்து 935 கோடியாக அதிகரித்தது. ஆனால் அந்த நிதியை பயன்படுத்தாமல் இருக்கும் சதவீதம் 86ல் இருந்து 90 ஆக அதிகரித்துள்ளது.