ஆந்திரா: கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் பலி!!
திருப்பதி: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த 23 பேரைக் கொண்ட பக்தர்கள் குழு ஒரு வேன் மூலம் அனந்தபுரம் திரும்பிக்கொண்டிருந்தனர். ராஜமுந்திரியில் தவ்லேஸ்வரம் அணைக்கட்டு அருகே வந்த போது வேன் நிலை தடுமாறியது.
வேன் டிரைவர் வேனை நிறுத்த செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வேன் தலைகீழாக கோதாவரி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 9 பெண்கள், 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாயினர்.
உயிரிழந்த அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டு விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்தது பற்றி விசாரணை மேற்கொள்ள ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
விபத்து குறித்து கேள்விப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து கருத்து கூறியுள்ள ராஜமுந்திரி நகர டி.எஸ்.பி அம்பிகா பிரசாத், அதிகாலை 5.30 மணிக்கு விபத்து நடைபெற்றது; அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருப்பதிக்கு சென்று விட்டு திரும்பியுள்ளனர். 14 பேர் மட்டுமே செல்லக்கூடிய வேனில் 23 பேர் பயணித்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக என்றார்.