ஜம்மு - காஷ்மீரில் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட 22 சமூக வலைதளங்களுக்கு தடை
ஜம்மு - காஷ்மீரில் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட 22 சமூக வலைதளங்களின் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், யூ டியுப் உள்ளிட்ட 22 சமூக வலைதளங்களை அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு காரணங்களால் சில மாதங்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அடிக்கடி கலவரங்களும் ஏற்பட்டு வருகின்றன.
சமீபத்தில் ராணுவ வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்பாவிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டி இந்த கல்வீச்சு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் தான் போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் ஒன்றிணைவதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட 22 வகையான சமூக ஊடகங்களுக்குத் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதன் மூலம் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மட்டுமின்றி, டுவிட்டர், விசாட், க்யூக்யூ, ஓசோன், கூகுள் பிளஸ், ஸ்கைப், லைன், பின்டிரஸ்ட், ஸ்னாப்சாட், யூ டியுப், வைன், ஃபிளிக்கர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.