கடற்படை விமான விபத்தில் 25 வயது பைலட் மாயம்: கவலையில் குடும்பத்தார்
பெங்களூர்: இந்திய கடற்படையின் ரோந்து விமானம் கடலில் விழுந்தது. அந்த விமானத்தில் இருந்த 25 வயது விமானி என்ன ஆனார் என்று இதுவரை தெரியவில்லை.
கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா தளத்தைச் சேர்ந்த இந்திய கடற்படையின் ரோந்து விமானமான டோர்னியர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோது கர்நாடக மாநிலம் கர்வார் அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த விமானி நிகில் ஜோஷி என்பவர் மீனவர்களால் மீட்கப்பட்டார். ஆனால் மற்றொரு விமானியான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த அபினவ் நகோரி(25) மற்றும் பயிற்சியை பார்வையிட்ட பெண் அதிகாரி கிரண் ஆகியோர் மாயமாகியுள்ளனர்.
அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் இதுவரை அவர்கள் பற்றி எந்தவித தகவலும் இல்லை. இந்நிலையில் உதய்பூரில் உள்ள சித்ரகூட் நகரில் இருக்கும் அபினவ் வீட்டில் அவரது நண்பர்களும், உறவினர்களும் குவிந்துள்ளனர்.
விடுப்பில் ஊருக்கு சென்ற அபினவ் கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். அவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ஒருவர் ஜோத்பூரிலும், மற்றொருவர் கென்யாவிலும் உள்ளனர்.
மகன் பற்றி ஏதாவது தகவல் கிடைத்துள்ளதா என்று அபினவின் தாய் சுஷீலா கோவா சென்றுள்ள தனது கணவருக்கு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை போன் செய்து கேட்டு வருகிறார். மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மையத்தின் தலைமை ஆசிரியையாக உள்ளார் சுஷீலா. உதய்பூரில் பள்ளிப் படிப்பை முடித்த அபினவ், பெங்களூரில் உள்ள எஸ்பிஜே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.இ. முடித்தார்.
சாகசம், தொழில்நுட்பம், எந்திரங்கள் மீது தீராக் காதல் கொண்ட அபினவ் கடந்த 2013ம் ஆண்டில் கடற்படையில் சேர்ந்தார். அபினவுக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர்கள் திட்டமிட்ட நிலையில் அவர் விபத்தில் சிக்கியுள்ளார்.