2ஜி வழக்கு: கனிமொழியின் இறுதி வாதம் நிறைவு... ஜூலை 15-ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு?
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழியின் இறுதி வாதம் இன்று நிறைவடைந்தது. இந்நிலையில் வரும் ஜூலை 15-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படலாம் என
டெல்லி: 2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழியின் இறுதி வாதம் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 15-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி கைமாறியது குறித்தும் சிபிஐ துறையும், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 2011-ல் சிபிஐ, 2014-ல் அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தன.
இவ் வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வருகிறார். இதில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
இதையடுத்து நேற்று முதல் இருதரப்பும் இறுதிவாதங்களை முன்வைக்க நீதிபதி ஷைனி உத்தரவிட்டிருந்தார். நேற்று ஆ.ராசா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் பெகுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா உள்ளிட்டோர் தமது இறுதி வாதங்களை முன்வைத்தனர்.
இன்று கனிமொழி தனது இறுதி வாதத்தை இன்று நிறைவு செய்தார். அப்போது நீதிபதி ஷைனி தெரிவிக்கையில், இரு தரப்பினரும் தங்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை வரும் 28-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களின் விளக்கங்கள் வரும் ஜூலை 15-ஆம் தேதி கேட்கப்படும்.
அதைத் தொடர்ந்து அன்றைய தினமே வழக்கின் தீர்ப்புக்கான தேதியும் அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ஷைனி. சுமார் 6 ஆண்டுகளாக சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.