கலைஞர் டிவிக்கு ரூ125 கோடி-'சீனி'யின் இந்தியா சிமெண்ட்ஸ், மல்லையாவின் யுபி குழும நிர்வாகி சாட்சியம்
டெல்லி: கலைஞர் டிவிக்கு 'விளம்பரங்களுக்காக" ரூ125 கோடி கொடுத்தது உண்மைதான் என்று என்.சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் விஜய் மல்லையாவின் யுபி குழும நிர்வாகிகள் டெல்லி நீதிமன்றத்தில் சாட்சியம் அலித்துள்ளார்.
மத்திய அமைச்சராக ஆ. ராசா பதவி வகித்த போது ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக ரூ 214 கோடியை ஸ்வான் டெலிகாமானது, டிபி ரியாலிட்டி என்ற நிறுவனம் மூலம் கலைஞர் டிவிக்கு கொடுத்தது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விசாரணையை சிபிஐ தொடங்கிய உடன் இந்த பணத்தை கடனாக வாங்கியதாகவும் பின்னர் வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறியது. உண்மையில் ஸ்வான் கொடுத்த பணத்தை கலைஞர் டிவி செலவழித்துவிட்டது.
இதனால் கலைஞர் டிவி ரூ214 கோடியை உடனே திருப்பித் தருவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த என். சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யூபி குழுமமும்தான் கலைஞர் டிவிக்கு பணம் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
சிபிஐ தொடர்ந்த வழக்கில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தது. அத்துடன் இந்த ரூ214 கோடி பணப் பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளது என்று அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 31-ந் தேதியன்று ஆ.ராசா. கனிமொழி உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவன நிர்வாகிகள் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் தற்போது அமலாக்கப் பிரிவு சாட்சிகளின் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் யுபி குழுமம் ஆகியவற்றின் நிர்வாகிகள் சாட்சியம் அளித்தனர்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆர். முரளிதர் தமது சாட்சியத்தில், கலைஞர் டிவிக்கு ரூ 60 கோடி பணம் கொடுத்தது உண்மைதான்.. அது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரத்துக்கான தொகை; இதில் எந்த ஒரு சட்டவிரோத பரிவர்த்தனையும் இல்லை என்றார்.
இதேபோல் விஜய் மல்லையாவின் யுபி குழுமத்தின் முதுநிலை மேலாளர் எஸ். ஆனந்த பிரசாத்தும், கலைஞர் டிவியுடன் 8 ஆண்டுகால விளம்பர ஒப்பந்த அடிப்படையில் ரூ65 கோடி பணம் செலுத்தப்பட்டது. இதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை எதுவும் இல்லை என்று கூறினார்.