தேவையில்லாத "வேலை" பார்த்த 3 சீனப் பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!
டெல்லி: சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஸின்குவா நிறுவனத்தின் 3 பத்திரிகையாளர்கள், அவர்களுக்கு தொடர்பு இல்லாத வேலைகளில் ஈடுபட்டதால் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்தியாவில் தங்குவதற்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸின்குவா நிறுவனத்தின் டெல்லி செய்திப் பிரிவு தலைவர் வூ கியாங், மும்பை செய்தியாளர்கள் டாங் லூ, மா கியாங் ஆகியோர்தான் வெளியேற்றப்படும் பத்திரிகையாளர்கள் ஆவர்.
இவர்கள் தங்களது வேலையைத் தவிர பிற வேலைகளில் அதிக அளவில் ஈடுபடுவதாக உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து இவர்கள் பல மாதங்களாக கண்காணிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவர்களின் விசா முடிவடைந்தது. அதன் பிறகு அவர்களது விசா தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது 3 பேரையும் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 31ம் தேதி அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இவர்களுக்குப் பதில் வேறு பத்திரிகையாளர்களை சீன அரசு அனுப்பலாம் என்றும் இந்திய அரசு விளக்கியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கைக்கும், இந்தியாவை என்எஸ்ஜி அமைப்பில் இணைய விடாமல் சீன அரசு தடுத்து வருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.