ஒரே நாளில் 3 காங். எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்.. குஜராத் காங்கிரசில் பதற்றம்
ஒரே நாளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியம் ஆனதால் குஜராத் காங்கிரசில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆமதாபாத்: குஜராத் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சித்பூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வந்த் சிங், விரம்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ தேஜாஸ்ரீ படேல் ஆகியோர் காங்கிரசில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தனர். அவர் அறிவித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் விஜப்பூர் தொகுதி எம்எல்ஏவான பி.ஐ.படேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் நேராக பாஜக அலுவலகத்திற்குச் சென்றனர். பின்னர், பாஜகவின் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்தத் திடீர் கட்சித் தாவல் சம்பவத்தால் குஜராத் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை அடுத்து, எல்லா மாநிலத்திலும் விளையாடும் பாஜக மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூவர் பாஜகவிற்கு தாவியதால், காங்கிரஸ் கட்சியில் உள்ள மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 56 ஆகக் குறைந்துள்ளது.
ஏற்கனவே, குஜராத் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா காங்கிரசை விட்டு தமது ஆதரவாளர்களுடன் விலகினார். இதனை அடுத்து 3 எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து இன்று பாஜகவிற்கு தாவி இருப்பது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.