3 ஆண்டுகளில் 310 ராணுவ வீரர்கள் தற்கொலை... ராஜ்யசபாவில் பதறவைத்த அமைச்சர்
கடந்த 3 ஆண்டுகளில் 310 இந்திய ராணுவ வீரர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று மத்திய இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் 310 இந்திய ராணுவ வீரர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். குடும்பத்தை பிரிந்து இருப்பது, தேவையான போது விடுமுறை கிடைக்காதது போன்றவை அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது அவர்களை மரணம் வரை கொண்டு செல்கிறது.
இது தொடர்பாக ராஜ்யசபாவில் பேசிய அமைச்சர் சுபாஷ் பாம்ரே, " கடந்த 2014 ம் ஆண்டு முதல் இப்போது வரை இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் 310 பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டில், 84 பேரும், 2015ம் ஆண்டில் 78 பேரும், 2016ம் ஆண்டில் 104 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்த ஆண்டில், சென்ற ஜூலை மாதம் வரை 44 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதனால் இந்திய ராணுவ அதிகாரிகள், வீரர்களின் மனஅழுத்தத்தை குறைப்பதற்கான மனோதத்துவ பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் ராணுவ வீரர்களின் வீரர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றி, அவர்கள் பணியில் சிறப்பாகச் செயல்படமுடியும் " என்று அவர் தெரிவித்தார்.