சிறைக்குள் மத நல்லிணக்கம்.. முஸ்லிம்களுடன் ரம்ஜான் நோன்பு இருந்த இந்து கைதிகள்!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மத்திய சிறையில் ரம்ஜான் நோன்பு இருக்கும் முஸ்லிம்களுடன் இந்துக்களும் நோன்பை கடைபிடித்து மதநல்லிணக்கத்தை வளர்த்து வருகின்றனர்.
லக்னோ: மத்திய சிறையில் 1000-க்கும் மேற்பட்ட முஸ்லிம் கைதிகளுடன் 32 இந்து கைதிகளும் ரம்ஜான் நோன்பை கடைபிடித்து வருகின்றனர்.
ரம்ஜான் நோன்பு கடந்த சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமையே பிறை தெரிந்ததால் அன்றைய தினமே நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ரமலான் புனித மாதத்தில் முஸ்லிம்கள் 5 முறை தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இது அச்சமூக மக்களின் 5 கடமைகளில் முக்கியமானது. மனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக ஈர்ப்பு, ஈகை குணம் ஆகியவை நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும்.
சகிப்புத்தன்மை
பிற நாட்களைவிட நோன்பு இருக்கும் காலத்தில்தான் மனிதன் இறைவனுக்கு நெருங்கி வருகிறான். மற்ற நான்கு கடமைகளை நிறைவேற்றும்போது உடலால் தன்னை வருத்திக் கொள்ளும் நிலை ஏற்படாது. ஆனால் நோன்பு கடமையை நிறைவேற்றும்போது மட்டும் பசி, தாகம் போன்றவற்றால் உடல் ரீதியாக சிரமம் ஏற்படும். அந்த சிரமத்தை சகித்து இறைவனுக்காக நோன்பு வைப்பதால் அந்த குணம் இறைவனுக்கு பிடித்துப்போகிறது.
முன்னுரிமை எதற்கு?
ஐந்து வேளை தொழுதல், குர்ஆன் படித்து, தர்மங்கள் அதிகம் செய்வது ஆகியவற்றுக்கு ரம்ஜானில் முன்னுரிமை தரப்படுகிறது. மத்திய சிறையில் சுமார் 2600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1175 பேர் முஸ்லிம்கள் ஆவர். தங்களது முக்கிய கடைமையான ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர்.
32 இந்துக்களும்...
இவர்களுடன் இந்து மதத்தைச்சேர்ந்த 32 கைதிகளும் நோன்பு கடைபிடித்து வருவது மத நல்லிணக்கத்துக்கு நல்ல உதாரணமாக உள்ளது. நோன்பு இருக்கும் கைதிகளுக்கு மாலையில் உலர் பழ வகைகள், பால், ரொட்டி ஆகியவை வழங்கப்படுவதாக சிறை கண்காணிப்பார் ராகேஷ் சிங் தெரிவித்தார்.
கடந்த ஆண்டும்...
இதேபோல் கடந்த ஆண்டும் இந்து மதத்தைச் சேர்ந்த 60 கைதிகள் ரம்ஜான் நோன்பு கடைபிடித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013-ஆம் ஆண்டு இதே முசாஃபர்நகரில்தான் இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மதகலவரத்தால் 67 பேர் கொல்லப்பட்டதும், 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.