ஹேக்கிங்.. தகவல் திருட்டு.. உலுக்கும் சைபர் குற்றங்கள்.. 350% அதிகரித்துள்ளதாக தகவல்!
டெல்லி : நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் சைபர் குற்றச் சம்பவங்கள் 350% அதிகரித்துள்ளதாக, அசோசெம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
வீதிகளில் நடந்து சென்ற போது ஏற்பட்ட குற்றச்சம்பவங்கள் இப்போது வீட்டுக்குள் இருக்கும் பெண்களையும் விட்டு வைப்பதில்லை. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என வந்த பிறகு சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சைபர் குற்றங்கள் 350 சதவிகிதம் பெருகிவிட்டது.
அதேநேரத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டுபிடித்து தண்டிக்கும் அளவிற்கு காவல்துறையினரிடம் நவீன வசதிகள் இல்லை என்றே கூறவேண்டும். சைபர் குற்றங்களினால் சேலம் வினுப்பிரியா போன்ற ஏழைப்பெண்களின் உயிர்கள் பலியாவதை தடுக்கவும் முடிவதில்லை.
உலக அளவில், தொழில்நுட்ப வருகை காரணமாக, ஆன்லைன் வழியாக, பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இதில், ஏராளமானவை நல்ல காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டாலும், ஹேக்கிங் செய்து, தனிநபர் அந்தரங்கம் மற்றும் பல்வேறு வர்த்தகம் தொடர்பான ரகசிய தகவல்களை திருடுவது போன்ற சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இவை அனைத்தும் சைபர் எனப்படும் இணையவழி குற்றங்களாக பட்டியலிடப்படுகின்றன.
சைபர் குற்றங்கள் பெரும்பாலும் நைஜீரியா, பிரேசில், சீனா, பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளில் இருந்தே மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.
இத்தகைய குற்றங்கள் கடந்த 2011 முதல் 2014 வரையான 3 ஆண்டுகளில் மட்டும் 350% அதிகரித்துள்ளதாக, தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பான அசோசெம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பல்வேறு தகவல்தொழில்நுட்ப பாதுகாப்பு வசதிகள் வந்துவிட்டபோதிலும், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும், அசோசெம் குறிப்பிட்டுள்ளது.
சைபர் குற்றங்களை கண்காணித்து தடுக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டசபையில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. குற்றப் பின்னணியில் பெறப்படும் வன், மென் தட்டுகள், (சி.டி) செல்லிடை பேசி (செல்போன்), ஸ்கிம்மர், முக்கியமாக பணப் பரிவர்த்தனை அட்டைகள் (டெபிட், கிரெடிட் அட்டைகள்) போன்றவற்றை அதி நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்ய மின்னணு நினைவகக் கருவிகளின் பகுப்பாய்வுக்கான அதி நவீன தடய அறிவியல் கணினி ஆய்வு கருவி வாங்கப்படும்.
சமூக ஊடக ஆய்வகங்கள் அமைத்து, சமூக ஊடகங்களில் இருந்து நுண்ணறிவுத் தகவல்கள் பெறப்படும். வழக்கு தொடர்பான சொத்துகளை துரிதமாக ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக செல்லிடை பேசி, தொடர்பு கருவிகள் பகுப்பாய்வுக்கான இரண்டு அதிநவீன தடவியல் ஆய்வுக் கருவிகள் வாங்கப்படும்.
சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையானது நுண்ணறிவு செயலாக்க மையம், தகவல் தொடர்பு போன்ற அம்சங்கள் நிறைந்ததாக நவீனமயமாக்கப்படும் என்று அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஜெயலலிதா. இந்த அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வரும்போது தகவல் தொழில்நுட்பம் மூலம் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், அவர்களின் சங்கேத வார்த்தைகளை முன்கூட்டியே உணர்ந்து தடுக்க முடியும் என்கின்றனர் இத்துறை சார்ந்த வல்லுநர்கள்.