பெங்களூரில் கடந்த 5 வருடத்தில் ஐயாயிரம் குழந்தைகள் மாயம்.. என்னவாகிறார்கள் தெரியுமா?
பெங்களூர்: கடந்த ஐந்து வருடங்களில் பெங்களூரை சேர்ந்த 5473 குழந்தைகள் மாயமான நிலையில், அதில் 5116 குழந்தைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பெங்களூர் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த புஜிதா என்ற 13 வயது, 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி மாயமாகி சமூக வலைத்தளங்களில் சிறுமி போட்டோ வைரலாகியது. அதிருஷ்டவசமாக அச்சிறுமி ஹூப்ளியில் கண்டுபிடிக்கப்பட்டார்.
ஆனால், இதேபோல சிறுமிகள் மாயமாகும் சம்பவம் இப்போதில்லை.. வெகுகாலமாக தொடர்வதாக பெங்களூர் போலீஸ் புள்ளி விவரம் கூறுகிறது. 2011ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை பெங்களூரை சேர்ந்த 3 ஆயிரத்து 515 சிறுவர்கள் மாயமாகியிருந்தனர். 1958 சிறுமிகளும் காணாமல் போயிருந்தனர்.
ஆகமொத்தம், 5473 குழந்தைகள் மாயமான நிலையில், அதில் 5116 குழந்தைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கண்டுபிடிக்கப்படாத 356 குழந்தைகளில், 101 சிறுமிகளும், உள்ளடக்கம்.
அதேநேரம், 2011ம் ஆண்டை ஒப்பிட்டால் கடந்த ஆண்டில் குழந்தைகள் மாயமாவது வெகுவாக குறைந்தது. பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு இதற்கு முகக்கிய காரணம். பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்துக்கொண்டால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்பது போலீஸ் அட்வைஸ்.
படிப்பில் நெருக்கடி, பெற்றோர் திட்டுவது, காதலித்து ஜோடியுடன் ஓடிப்போவது ஆகியவை குழந்தைகள் மாயமாக முக்கிய காரணம். பல பெற்றோர் சமூக கேலிக்கு பயந்து புகார் கொடுக்க தயங்குவதும் அக்குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் போவதற்கு காரணமாக அமைகிறது. பஸ், ரயில் நிலையங்களுக்கு தப்பியோடும் இதுபோன்ற குழந்தைகளை, கூலி வேலை, ஹோட்டல் வேலைக்கு நைசாக பேசி அழைத்து செல்லும் கும்பல்களும் பெங்களூரில் பெருகிவிட்டன. பிச்சைக்காரர்களிடம் சிக்கி சிக்னல்களில் பிச்சையெடுக்கும் அவலமும் நிகழ்கிறது.