டெல்லியில் வளைத்து வளைத்து சீண்டப்படும் பெண்கள்.. 20 நாளில் 371 பேர் கைது
டெல்லி: டெல்லியில் கடந்த 20 நாட்களில் பெண்களை வன்கொடுமை செய்ததாக 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்குப் பெயர் போனது. அந்த கெட்ட பெயரிலிருந்து இன்னும் அது விடுபடவில்லை.
இந்த நிலையில், டெல்லியில் பெண்களை ஈட் டீசிங் மற்றும் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையை இம்மாதம் 3ம் தேதி டெல்லி போலீசார் ‘கைது செய் மற்றும் ஒழுக்கு படுத்து' என்ற பெயரில் தொடங்கினர்.
பெண்களை வன்கொடுமை செய்வோர்...
இதன்படி, டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் பொது இடங்களில் பெண்களை வன்கொடுமை செய்வோர் குறித்த கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டது. அதில், கடந்த 20 நாட்களில் மட்டும் டெல்லியில் பெண்களை வன்கொடுமை செய்த 2400 பேர் போலீசில் பிடிபட்டனர். இவர்களில் 370 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
தீவிர கண்காணிப்பு...
இதற்கான பெண்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தெற்கு டெல்லியில் அதிகம்...
தெற்கு டெல்லிதான் ஈவ் டீசிங்கில் மிகவும் மோசமாக உள்ளது. அங்குதான் 831 பேர் ஈவ் டீசிங் செய்ததாக ஆகஸ்ட் 3 முதல் 23ம் தேதி வரை சிக்கியுள்ளனர். தெருக்களில் செல்லும் பெண்களை சீண்டியதாக, கேலி செய்ததாக இவர்கள் பிடிபட்டனர்.
பஸ்களிலும் கண்காணிப்பு...
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம், தெளலா கான், வசந்த் விஹார் ஆகிய பகுதிகளிலும் அதிக அளவில் கண்காணிப்பை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். பஸ்களில் அதிக அளவில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களை பாலோ செய்பவர்கள்...
மெஹ்ராலி, மாள்வியா நகர் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களை பின்னாடியே பாலோ செய்வோர், கேலி செய்வோர் உள்ளிட்டோரை உடனுக்குடன் போலீஸார் பிடிக்கின்றனர்.
வடகிழக்கு டெல்லியில்...
அதிக அளவில் சேரிகள் நிரம்பிய வட கிழக்கு டெல்லியிலும் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு டெல்லியில் 69 பேர் கைதாகியுள்ளனர்.