"ஹை குரோத்"னு பேசுனீங்களே.. அப்ப எல்லாமே "டுபாக்கூர்"தானா கோப்பால்??
டெல்லி: அபரிமிதமான வளர்ச்சி, வளர்ச்சிப் பாதைக்கு வந்து விட்டோம் என்றெல்லாம் பேசி வந்த பாஜக ஆட்சிக்கு பெரும் தர்மசங்கடமாக வந்து சேர்ந்துள்ளது சென்செக்ஸின் வீழ்ச்சி.
மோடி பிரதமர் பதவிக்கு வந்த பின்னர் 3வது முறையாக சென்செக்ஸ் வீழ்ச்சிப் பாதைக்குப் போயுள்ளது. கூடவே நிப்டியும். இதை சாதாரண நிகழ்வாக கருத முடியாத நிலை. அதை விட முக்கியமாக பாஜகவுக்கு இது நிச்சயம் நல்ல செய்தியும் அல்ல.
இந்திய பங்குச் சந்தை நேற்று பெரும் சரிவைச் சந்தித்தது. மே 2014ம் மோடி பிரதமரான பின்னர் 3வது முறையாக இப்படி சரிவைச் சந்தித்துள்ளது சென்செக்ஸ்.
800 புள்ளிகளுக்கு மேல் சரிவு
நேற்று சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிப்டியும் 7000 புள்ளிகளுக்குக் கீழே போனது. இந்த இரு நிகழ்வுகளும் நேற்று பங்குச் சந்தையில் அதிர்ச்சி அலைகளைப் பரப்பின.
வங்கித் துறை பங்குகள் விற்பனையால்
வங்கிகளின் பங்குகள் விற்பனையால்தான் நேற்றைய பெரும் சரிவுக்குக் காரணமாம். குறிப்பாக இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் டிசம்பர் காலாண்டு அறிக்கை திருப்திகரமாக இல்லாததே பங்குகள் விற்பனைக்கு வரக் காரணம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு நஷ்டம்
நேற்றைய வர்த்தகத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சற்று நஷ்டத்தைச் சந்தித்தது. அதன் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 2.99 சதவீத சரிவைச் சந்தித்தன.
வாராக் கடன் அதிகரிப்பால் வந்த வினை
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் லாபம் 62 சதவீதம் சரிந்து ரூ. 1115 கோடியாக டிசம்பர் காலாண்டில் இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் வாராக் கடன் தொகை அதிகரித்ததே.
அடானிக்கும் நஷ்டம்தான்
ஸ்டேட் பாங்க் தவிர டாடா, அடானி போர்ட்ஸ், பிஎச்இஎல், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல் மற்றும் எச்டிஎப்சி ஆகியவற்றுக்கும் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் நஷ்டமே ஏற்பட்டது.
முங்கிப் போன முதலீட்டாளர்கள்
நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தின் இறுதியில் இந்திய முதலீட்டாளர்களுக்கு ரூ. 3.13 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். கடந்த 6 மாதங்களில் இல்லாத மிகப் பெரிய சரிவு இது.
|
பேச்செல்லாம் பெருசா இருந்ததே?
என்ன காமெடி என்றால் 2 நாட்களுக்கு முன்புதான் நாட்டின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் இருப்பதாக மோடி அரசு கூறியிருந்தது. மேலும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் என்றும் அது கூறியிருந்தது.
பொருளாதார நிபுணர்களுக்கு நம்பிக்கை இல்லை
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் திருப்திகரமாக இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறி வந்தனர். ஆனால் அரசின் தலைமை புள்ளிவிவர நிபுணர் ஆனந்த்குமார், அரசு சொல்வது சரியே, நிச்சயம் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக அடித்துக் கூறியிருந்தார்.
விமர்சகர்கள் சந்தேகம் சரியே
ஆனால் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அரசு கூறிய தகவல்கள் சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக விமர்சகர்கள் கூறியது சரியே என்பதையே தற்போதைய பங்குச் சந்தை சரிவு எடுத்துக் காட்டுவதாக முதலீட்டாளர்கள் கூறுகிறார்கள்.
சொன்னதெல்லாம் தவறு
உற்பத்திப் பிரிவு 9.5 சதவீத வளர்ச்சியையும், ரியல் எஸ்டேட் தொழில்துறை சேவைப் பிரிவு ஆகியவை 10.3 சதவீத வளர்ச்சியைப் அடைந்துள்ளதாகவும் அரசு கூறியிருந்தது.
உற்பத்திப் பிரிவுக்குத்தான் செம அடி
உண்மையில் நேற்றைய பங்குச் சந்தை சரிவில் உற்பத்திப் பிரிவும், நிதி சேவைப் பிரிவு நிறுவனங்களும்தான் செம அடி வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் மோசமாகும்
ஆனால் சரிவு இத்துடன் நிற்காதாம். வரும் நாட்களில் மேலும் நிலைமை மோசமாகும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். தற்போதைய பொருளாதார நிலை மோசமாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அதே நிலைதானே இப்போதும்
உண்மையில் மோடி அரசு பதவிக்கு வந்தபோதும் இதே நிலையில்தான் நமது பொருளாதாரம் இருந்தது. இப்போதும் அதை நிலையில்தான் உள்ளது.
எந்தப் பெரிய மாற்றமும் ஏற்பட்டு விட்டதாக தெரியவில்லை..!