கொல்கத்தாவில் பயங்கர குண்டுவெடிப்பு - 4 வயது குழந்தை பலி
கொல்கத்தா: மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் இன்று ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் 4 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வடக்கு கொல்கத்தாவின் தாலா பார்க் பகுதியில், காவல் நிலையம் அருகேயே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 4 வயதான அக்குழந்தை, அந்த வெடிகுண்டினை பந்து என்று நினைத்து எடுத்து விளையாடிய போது குண்டு வெடித்தது.
பூட்டோ முல்லா என்ற அக்குழந்தை குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. எனினும், ஆர்.கே கர் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்களும், கொல்கத்தா போலீசாரும் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலும் இரண்டு வெடிகுண்டுகளைக் கண்டறிந்தனர். அவற்றைக் கைப்பற்றி பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.