ஆந்திராவில் வகுப்பில் சிறுநீர் கழித்த 4 வயது சிறுமியை சூடான இரும்புத்தகடு மீது அமர வைத்த ஆசிரியை
ஹைதராபாத்: ஆந்திராவில் வகுப்பறையில் சிறுநீர் கழித்ததற்காக 4 வயது சிறுமியை சூடான இரும்புத் தகடு மீது அமர வைத்ததில் சிறுமியின் மர்ம உறுப்பில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு நகரில் செயல்பட்டு வருகிறது ஹோப் என்னும் தனியார் பள்ளி. அந்த பள்ளியில் படித்து வரும் 4 வயது சிறுமி வகுப்பறையில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதனால் ஆசிரியை ஆத்திரம் அடைந்து மதிய வேளையில் சிறுமியை சூடான இரும்புத் தகடு மீது அமர வைத்துள்ளார். சூடான தகடில் அமர்ந்ததில் சிறுமியின் மர்ம உறுப்பில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமியிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. இதையடுத்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியை மற்றும் ஆயா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாநில குழந்தைகள் உரிமை அமைப்பின் உறுப்பினர் அச்யுத் ராவ் கூறுகையில்,
இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.