பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1,115 பேர் பலி; கைவசம், ஏலக்காய், கிராம்பு இருக்கட்டும்!!
டெல்லி: பாலிவுட் நடிகை சோனம் கபூர் முதல் கோயம்புத்தூர் சாந்தி வரை ஏழை, பணக்காரன் பேதமின்றி தாக்கிவருகிறது பன்றிக்காய்ச்சல். லேசாக இருமினாலே ஏய் அப்பாலே தள்ளிப்போ பன்னிக்காய்ச்சலா இருக்கப்போவுது என்று மூக்கைப் பொத்திக்கொள்கின்றனர் சிலர்.
(தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?)
அந்தளவிற்கு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது பன்றிக்காய்ச்சல். கடந்த இரண்டு மாதங்களில்மட்டும் நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 1,115 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஒரேநாளில் 40 பேர் பலியாகியுள்ளனர், இதில் தமிழகத்தில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரும் அடக்கம்.
பரவும் பன்றிக்காய்ச்சல்
ஹெச்1 என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 20,795 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
1115 பேர் பலி
இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு கடந்த மார்ச் 1ஆம் தேதி வரை 1,115 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் 275 பேர் இறந்துள்ளனர். அம்மாநிலத்தில் மட்டும் 4,614 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலி எண்ணிக்கை
ராஜஸ்தானில் 267 பேரும், மத்திய பிரதேசத்தில் 160, மராட்டியத்தில் 152, தெங்லுங்கானாவில் 57, பஞ்சாபில் 44, கர்நாடகாவில் 46, டெல்லியில் 10, ஹரியானாவில் 22, ஆந்திராவில் 14, இமாச்சல பிரதேசத்தில் 8, ஜம்மு-காஷ்மீரில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கோவை பெண் பலி
.கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 38). கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக ஆவாரம் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. உடல்நிலை மோசமடையவே கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சாந்திக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார். இதனைடுத்து தமிழ்நாட்டில் இதுவரை 10 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் 7 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.
நோயை கட்டுப்படுத்த
அதிக வெப்பம் பதிவாகும் பகுதிகளில் இந்த நோயை பரப்பும் கிருமிகள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் இந்நோயை நோயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராஜ்யசபாவில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு உறுதி
பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பன்றிக் காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்படும் என்றும், இதற்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதி அளித்துள்ளார். 20,795 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்
கிராம்பு, ஏலக்காய்
பன்றிக்காய்ச்சல் தாக்குமோ என்ற அச்சப்பட வேண்டாம். கைவசம் வீட்டிலேயே மருந்து இருக்கு. சுத்தமான கற்பூரம் சிறிதளவு, 6 கிராம்பு, 6 ஏலக்காய் ஆகியவற்றை சிறிய கைக்குட்டையில் வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசனையை நுகரலாம். தெய்வீக மூலிகையான துளசி நோய் தீர்க்கும் அரியவகை மூலிகையாகும். தினசரி நான்கு இலைகளை பறித்து நன்றாக மென்று வெறும் வயிற்றில் சாப்பிட பன்றிக்காய்ச்சல் கிட்டவராது என்கின்றனர் அனுபவசாலிகள். முயற்சி செய்து பாருங்களேன்