டெல்லி கேஜ்ரிவால் அரசுக்கு 49% டெல்லிவாசிகள் ஆதரவு- 35% பேர் அதிருப்தி!!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தில் 100 நாட்கள் ஆட்சியை நிறைவு செய்து கேஜ்ரிவாலுக்கு அம்மாநில மக்களில் 49% தொடர்ந்தும் ஆதரவு தருகின்றனர்.. இருப்பினும் 35% மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கருத்து கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 2வது முறையாக முதல்வராகப் பதவியேற்ற அரவிந்த் கேஜ்ரிவால் ஆளுநர் நஜீப் ஜங்குடன் அதிகாரங்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார். தற்போதைய கேஜ்ரிவால் அரசு குறித்து இன்ஸ்டாவாணி நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.
இது தொடர்பாக இண்டியா ஸ்பென்ட் இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
49% பேர் ஆதரவு-35% எதிர்ப்பு
டெல்லிவாசிகளில் கேஜ்ரிவால் அரசு நல்ல நிர்வாகத்தைத் தருகிறது எனக் கூறி 49% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கேஜ்ரிவாலை அங்கீகரிக்க தயாராக இல்லை என 35%; கருத்து எதுவும் சொல்வதற்கில்லை என 16% பேர் கூறியுள்ளனர்.
ஊழல் எதிர்ப்பு
மொத்தம் 435 பேரிடம் நடத்தப்பட்ட இக்கருத்து கணிப்பில் 59% பேர், டெல்லியில் ஊழலை ஒழிப்பதற்காக கேஜ்ரிவால் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை பாராட்டுகின்றனர். இதில் 28% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 13% எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
விஐபி கலாசாரம்
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்த பின்னர் விஐபி கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக என 278 பேரிடம் கேட்கப்பட்டது. இதில் 48% பேர் போதுமான நடவடிக்கையை கேஜ்ரிவால் எடுத்துள்ளார் எனக் கூறியுள்ளனர்.
அதிருப்தி
அதே நேரத்தில் 31% இன்னமும் கேஜ்ரிவால் அரசு இதில் சரியாக செயல்படவில்லை எனக் கூறியுள்ளனர்.