பீகார், மேற்கு வங்கத்தில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் பீதி
டெல்லி: நேபாள எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் பீகார், மேற்கு வங்கத்தில் திங்கட்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி, பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுகக்ததால் நேபாளத்தில் 4 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்தியாவில் 70 பேர் பலியாகியுள்ளனர்.
நேபாளத்தில் அவ்வப்போது ஆப்டர்ஷாக் எனப்படும் நிலஅதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேபாள எல்லையையொட்டி உள்ள இந்தியாவின் வடக்கு, கிழக்கு பகுதி, பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் சில பகுதிகளில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருந்தது.
மதுபுரா, மதுபானி, பாட்னா, கதியார், சஹர்ஸா, சிலிகுரி, ஜல்பைகுரி மற்றும் அஸ்ஸாமில் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தில் அடிக்கடி நிலஅதிர்வு ஏற்படுவதால் மக்கள் வீடுகளில் தூங்காமல் இரவு பொழுதை தெருக்களில் கழித்து வருகின்றனர்.
நேபாளத்தில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.