ஆரம்பமே சர்ச்சை.. டால்மியாவை வரவேற்க நள்ளிரவு வரை விமான நிலையத்தில் காக்க வைக்கப்பட்ட 50 குழந்தைகள்!
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜக்மோகன் டால்மியாவை வரவேற்க கொல்கத்தா விமான நிலையத்தில் நள்ளிரவு வரை 50 ஆதரவற்ற பெண் குழந்தைகள் காக்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான ஜக்மோகன் டால்மியா நேற்று இரவு கொல்கத்தா திரும்பினார். அங்கு அவரை வரவேற்க அவரது நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்காக அறக்கட்டளை ஒன்றில் இருந்து 50 ஆதரவற்ற பெண் குழந்தைகளை அந்த நண்பர் அழைத்துக் கொண்டும் வந்திருந்தார். கொல்கத்தா விமான நிலையில் நள்ளிரவு 11.30 மணி வரை பூங்கொத்துகளுடன் தூங்கி வழிந்த கண்களுடன் அந்த குழந்தைகள் சோர்ந்து போய் காத்திருந்தனர்.
அவர்களிடம் சென்று யாருக்காக காத்திருக்கிறீர்கள் என்றால் தெரியாது என்று கூறியுள்ளனர். பல குழந்தைகள் தூங்கி விழுந்து பின் சுதாரித்து கண்களை கசக்கிக்கொண்டு விழித்திருந்தனர்.
இச்சம்பவத்தின் போது தமது நண்பரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வந்த ஷந்த தஸ்வானி என்ற தொழிலதிபர் இந்த சம்பவம் அனைத்தையும் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஷந்த தஸ்வானியின் நண்பரான அரோரா, இது காலனியாதிக்கத்தின் நீட்சி. டால்மியாவின் நண்பர் என்றால் நீங்கள் சென்று அவருக்கு நல்ல வரவேற்பு கொடுங்கள். ஆனால் எதற்காக ஆதரவற்ற பெண் குழந்தைகள்? என்று கொந்தளித்திருக்கிறார்.
கொல்கத்தா விமான நிலையத்தில் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பால் ஆனந்த கண்ணீர் அடைந்தேன் என்று கூறியிருக்கிறார் டால்மியா. ஆனால் இப்படி ஆதரவற்ற பெண் குழந்தைகளா வைத்து அவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தா ஆனந்த கண்ணீர் அடைய வேண்டும் மிஸ்டர் டால்மியா? என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பெண் குழந்தைகள் தமக்காக காத்திருப்பது டால்மியாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையெனில், இனி அவர் இதுபோன்ற சம்பவத்தை ஊக்குவிக்காமல் இருக்க வேண்டும் என்பதே பலரின் வலியுறுத்தலாகவும் இருக்கிறது.