பஹ்ரைனில் 500 இந்திய தொழிலாளர்கள் உணவின்றி அவதி... நடவடிக்கை எடுக்க சுஷ்மா உத்தரவு
அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் 500-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்களுக்கு அந்நாட்டு நிறுவனங்கள் ஊதியம் வழங்காததால் உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.
டெல்லி: அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்நாட்டு நிறுவனங்கள் ஊதியம் வழங்காததால் 500-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
பக்ரைனில் உள்ள எண்ணெய் கம்பெனிகளில் கைநிறைய சம்பளம் என்ற கவர்ச்சி கரமான அறிவிப்பை நம்பி ஒரு சில கம்பெனிகளில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அங்கு சேர்ந்த ஒரு சில மாதங்களுக்கு பேசப்பட்ட ஊதியம் வழங்கப்படுகிறது.
அதன் பின்னர் ஆள்குறைப்பு, போதிய வருமானம் இன்மை, கச்சா எண்ணெய் விலை குறைப்பு உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி அவர்களுக்கு உரிய ஊதியத்தை வ
வழங்காமல் எண்ணெய் நிறுவனங்கள் இழுத்தடிப்பு செய்கின்றனர்.
அந்த வகையில் பல்வேறு நிறுவனங்களுக்கு இந்தியாவில் இருந்து சென்ற ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக எண்ணெய் ஆலை நிர்வாகத்தினர் ஊதியம் சரிவர வழங்கவில்லை. இதனால் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் கடும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், உதவி கேட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்ததாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இந்த தகவலை அறிந்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஊதியமின்றி துயரப்படும் இந்தியர்களுக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர்கள் விவகாரம் பக்ரைன் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் இதே போன்று சிக்கி தவித்த சுமார் 88 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டது நினைவுக்கூறத்தக்கது.