பெங்களூரில் அரசு பஸ்சில் "தேவே கெளடா"வை அடித்து நொறுக்கிய 6 நைஜீரிய மாணவிகள்
பெங்களூர்: பெங்களூரில் மாநகரப் பேருந்து(பிஎம்டிசி) டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கிய நைஜீரிய நாட்டுப் பெண்கள் 6 பேரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் பி.எம்.டி.சி. பேருந்து ஒன்று மெஜெஸ்டிக்கில் இருந்து ஆனேக்கல்லுக்கு சென்றது. கார்பரேஷன் சர்க்கிள் அருகே நைஜீரியாவைச் சேர்ந்த 6 மாணவிகள் அந்த பேருந்தில் ஏறினர். அவர்கள் கண்டக்டர் தேவே கவுடாவிடம் தினசரி பாஸ் கேட்க அவரோ அடையாள அட்டையை காண்பித்தால் தான் தருவேன் என தெரிவித்துள்ளார்.
அடையாள அட்டையை காண்பிக்க மறுத்து மாணவிகள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேருந்து லால்பாக் சாலை நோக்கி சென்றபோது பாஸ்போர்ட் சேவா கேந்திரா அருகே நிறுத்துமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். பேருந்து நிற்காமல் சென்றதும் ஆத்திரம் அடைந்த அவர்கள் கண்டக்டரை தாக்கினர்.
ஒரு மாணவி கண்டக்டரின் கழுத்தைப் பிடித்து அவரை சீட்டில் சாய்க்க, மற்றொரு மாணவி தனது காலணியால் அவரை அடித்திருக்கிறார். மேலும் மாணவிகள் டிரைவரையும் அடித்துள்ளனர். இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதையடுத்து டிரைவர் பேருந்தை நேராக வில்சன் கார்டன் காவல் நிலையத்திற்கு விட்டார். அவரும், கண்டக்டரும் அளித்த புகாரின்பேரில் போலீசார் அந்த 6 மாணவிகளையும் தங்கள் கஸ்டடியில் வைத்துள்ளனர். மேலும் அவர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிரைவரும், கண்டக்டரும் வில்சன் கார்டன் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்த மாணவிகள் ஏலஹங்காவில் தங்கி கல்லூரிகளில் படித்து வருவது தெரிய வந்துள்ளது.