பரோடா வங்கி மூலம் ரூ 6,172 கோடி கருப்பு பண பரிவர்த்தனை....6 பேர் கைது!
டெல்லி: டெல்லி பேங்க் ஆப் பரோடா வங்கி மூலம் ரூ 6,172 கோடி கருப்பு பணம் பரிவர்த்தனை நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அந்த வங்கி கூடுதல் மேலாளர் உட்பட 6 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த 2 மாதங்களுக்குப் பின்னர் ரூ 6,172 கோடி கருப்புப் பணம் டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் உள்ள 59 கணக்குகள் மூலமாக ஹாங்காங் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் ஹாங்காங்கில் இருந்து அரிசி, முந்திரி, பருப்பு வகைகள் ஆகியவற்றை வாங்குவதற்காக இந்தத் தொகை அனுப்பி வைக்கப்பட்டதாக அவர்கள் கூறியிருந்தனர்; இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அறிக்கையை சமர்பித்த பிறகும் இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு முறைகேடு வங்கியின் உயரதிகாரிகள் அல்லது நிதி அமைச்சகத்தின் உதவியின்றி நடந்திருக்க முடியாது என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வங்கியில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில் இன்று அந்த வங்கியின் கூடுதல் பொதுமேலாளர் உட்பட 6 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் 4 இடைத்தரகர்களும் அடங்குவர்.