சபரிமலையிலும் உண்டியல் திருட்டு – 6 பேர் போலீசாரால் கைது
சபரிமலை: சபரிமலைக் கோவில் உண்டியலில் திருடிய 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை நிறைவடைய உள்ள நிலையில், கோவில் உண்டியல் பணம் சேகரிப்பு மற்றும் எண்ணும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கோவில் உண்டியலில் கிடைத்துள்ள பணம் மற்றும் தங்க-வெள்ளி நகைகள் சேகரிப்புக்காக கேரளாவில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து ஊழியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு பணியாற்றி வந்தனர்.
கோவில் சன்னதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் குவிந்திருந்த பணம் உள்ளிட்டவற்றை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊழியர்கள் சேகரித்து குறிப்பிட்ட அறையில் கொண்டு வந்து குவித்து அவற்றை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணியில் ஈடுபட்ட மார்த்தாண்டபுரம் தேவசத்தில் பஞ்சவாத்ய கலைஞரான சஜிகுமாரன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அவரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். சம்பவத்தன்று அவரை பிடித்து போலீசார் திடீரென சோதனை செய்தனர். அப்போது எதுவும் கிடைக்கவில்லை.
எனினும் அவரது நடவடிக்கையில் மேலும் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீஸார் அவரை தனி அறையில் வைத்து ஆடைகளை அகற்றி சோதனை நடத்தியபோது, உள்ளாடை பகுதியில் ரப்பர் உறைகளால் இணைத்து பணம் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 11ம், 500 ரூபாய் நோட்டுகள் 28ம் கைப்பற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் வேலைபார்த்து வந்த மற்ற ஊழியர்கள் 13 பேர் தங்கியிருந்த விடுதியில் போலீசார் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ரூபாய் 10 லட்சத்து 62 ஆயிரத்து 65 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும், வெளிநாட்டு கரன்சிகள் 3 லட்சத்து 20 ஆயிரத்து 399 ரூபாய் மதிப்புள்ளவையும், 111 கிராம் தங்க நகைகளும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஊழியர்கள் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை போலீசார் ரான்னி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் 15 நாள் காவலில் வைத்தனர்.