காஷ்மீரில் தற்கொலை படை தீவிரவாதிகள் ஊடுருவல்? எல்லையில் பதற்றம்.. ராணுவம் குவிப்பு !
டெல்லி: காஷ்மீரில் 60க்கும் அதிகமான தற்கொலை படை தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு படையினரும், ராணுவத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக எல்லை பாதுகாப்பு படை, ராணுவ வீரர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக காஷ்மீருக்குள் 60க்கும் மேற்பட்ட தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
தற்போது ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் குறிப்பாக ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, எஸ்எஸ்பி, ஜம்மு காஷ்மீர் போலீசார் ஆகியோரை குறிவைத்து தாக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு தாக்குதலை தீவிரவாதிகள் உத்தம்பூரில் நடத்தினர். அதேபோல் சில தினங்களுக்கு முன்பு பாம்போரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து லஸ்கர் தளபதி துஜானாவின் உதவியுடன்தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் காஷ்மீருக்குள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் மிகச் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் பல்வேறு விதமான ரகசிய முறைகளில் அவர்களை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்து நாசவேலைகள் மற்றும் தாக்குதலில் துஜானா ஈடுபடுத்தி வருவதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒட்டு மொத்தமாக இந்த தாக்குதலுக்கு பின்னால் மும்பை தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மருமகன் காலித் வலீத்தின் வேலை என்றும் சொல்லப்படுகிறது.
காலீத்துக்கு உதவும் வகையில்தான் துஜானா காஷ்மீரில் மறைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிகிறது. கடந்த வாரம் 25ம் தேதி சிஆர்பிஎப் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கிடைத்த ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் ஆதரவும் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே காஷ்மீர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அமர்நாத் யாத்திரை நடந்து வரும் வேளையில் தீவிரவாதிகளின் தாக்குதல் காஷ்மீரில் கூடுதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 60க்கும் அதிகமான தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்துள்ள தகவலால் காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.