மும்பை குண்டுவெடிப்பில் சிக்கி கோமாவில் சிகிச்சை பெற்றவர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மரணம்..
மும்பை: கடந்த 2006 ஆம் ஆண்டு மும்பை ரயில்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி கோமா நிலைக்கு சென்றவர் நினைவு திரும்பாமலேயே இன்று உயிரிழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் 2006 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி, அடுத்தடுத்து ரயில் நிலையங்களில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் தானே மாவட்டத்தின் பயாந்தர் பகுதியைச் சேர்ந்த பராக் சாவந்த் தலையில் படுகாயமடைந்தார்.
மும்பையின் சர்ச் கேட் ரயில் நிலையத்தில் இருந்து விரார் பகுதிக்குச் சென்ற ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு பராக் சாவந்தை, கோமா நிலைக்குத் தள்ளியது.
மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில், கோமா நிலையிலேயே மேல் சிகிச்சை பெற்று வந்த பராக் சாவந்தை, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் நேரில் சந்தித்ததுடன், அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
2008 ஆம் ஆண்டு சாவந்துக்கு நினைவு திரும்பியது. ஆனால் மீண்டும் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த போது கர்ப்பிணியாக இருந்த பராக் சாவந்தின் மனைவி ப்ரீத்திக்கு, மாநில அரசின் சார்பில் கருணை அடிப்படையில், ரயில்வேயில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனிடையே மருத்துவ உதவியுடன் ப்ரீத்தி தனது மகள் பிரசிதியை பெற்றெடுத்தார். தற்போது 8 வயதாகும், பிரசிதி நினைவு தெரிந்தது முதலே, தனது தந்தையை கோமாவில்தான் பார்த்து வந்தார்.
இந்நிலையில் தனது மகள் முகத்தைக் கூட பார்க்க முடியாமல், 7 ஆண்டுகளாக கோமா நிலையிலேயே இருந்த பராக் சாவந்த் நினைவு திரும்பாமலேயே இன்று காலை உயிரிழந்தார்.
இதன் மூலம், மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் மரணமடைந்தார்.