மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.... காத்திருக்கும் அப்பீல்களும் கருணை மனுக்களும்
மும்பை: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டாலும் அடுத்தடுத்த அப்பீல்கள், கருணை மனுக்களால் முழுமையான நீதி நடைமுறைகள் முடிவடைய 5 அல்லது 6 ஆண்டுகாலம் ஆகும் என்கின்றனர் சட்டவல்லுநர்கள்.
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விரும்பினர்..இருந்த போதும் 5 பேருக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பையும் அவர்கள் மனதார ஏற்றுக் கொண்டுவிட்டனர்...
இத்துடன் அனைத்தும் முடிந்துவிட்டனவா? என்றால் ஆம் ஒரு பகுதி முடிந்துவிட்டது... இன்னும் அடுத்தடுத்த கட்டங்கள் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்துக்கும் அதன் பின்னர் உச்சநீதிமன்றத்துக்கும் போகலாம்... ஒருவேளை உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தால்... கருணை மனுவோடு ஜனாதிபதியையும் நாட முடியும்...
குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சந்தோஷ் ஷாவந்த் கூறுகையில், ஏற்கெனவே நீதி கிடைக்க 8 ஆண்டுகாலம் ஆகிவிட்டது.. ஆகையால் இந்த மேல்முறையீடுகள், கருணை மனுக்கள் விவகாரங்களை உடனுக்குடன் முடித்துவிட வேண்டும் என்கிறார்...
ஆனாலும் மேல்முறையீடுகள், கருணை மனுக்கள் என எல்லாம் முடிவடைய இன்னமும் 5 அல்லது 6 ஆண்டுகாலம் ஆகும் என்கின்றனர்.. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்படுவதற்கு முதல்நாள் கூட யாகூப் மேமன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து பார்க்கப்பட்டது.. அதே போன்ற சூழல் இந்த வழக்கிலும் வரக்கூடும்..
ஏனென்றால் குற்றவாளிகள் தரப்புக்கு சாதகமான மேல்முறையீட்டு தீர்ப்புகள் வந்தால் அரசுத் தரப்பு நிச்சயம் எதிர்த்து மேல்முறையீட்டுப் போகும்...ஏற்கனவே 8 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிட்டு வந்தது அரசுத் தரப்பு..
இதனால் மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முழுமையான நீதி நடைமுறைகள் நிறைவடைய 5 அல்லது 6 ஆண்டுகாலம் ஆகும் என்றே கூறப்படுகிறது...