அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல்.. 7 பேர் பலி; 12 பேர் படுகாயம்
காஷ்மீர்: அமர்நாத் யாத்ரீகள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பனி சூழ்ந்த மலைகளுக்கு நடுவே, இயற்கையாக உருவாகியுள்ள குகை ஒன்றில், தானாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும் இருந்து, இந்துக்கள் புனித யாத்திரை, மேற்கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான வருடாந்திர அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 29ந்தேதி தொடங்கியது. 4 ஆயிரம் பக்தர்களை கொண்ட முதல் குழு, ஜம்முவில் இருந்து பயணத்தை தொடங்கினர். இந்நிலையில் இன்று மாலை காஷ்மீரின் அனந்த்நாக் அருகே யாத்ரீகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 7 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
முன்னதாக 150 யாத்ரீகர்களையும், 100 காவல்துறையினரையும் தீவிரவாதிகள் இலக்காக்கி கொல்ல இருப்பதாக சமூக வலைதளங்களிலும் தகவல் கசிந்தது. இதையடுத்து யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.