மருத்துவ மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு.. மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
மருத்துவ மாணவர்களுக்கு 85 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிக் கடந்த ஜூன் 22ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, 85 சதவீத உள்ஒதுக்கீடு என்பது மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 14ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 31ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், மருத்துவ கலந்தாய்வு தாமதம் ஆவதால் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு இன்று அவசர வழக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.