டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான, ரயில் சேவைகள் கடும் பாதிப்பு
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. விமானம், ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லியில் வழக்கம்போல் இந்த ஆண்டும் குளிர்காலத்தில் கடுமையான உறைப்பனி பெய்து வருகிறது. பின்னிரவில் தொடங்கும் பனிமூட்டம் காலை 10 மணிவரை விலகாமல் டெல்லி நகரம் முழுவதும் பனித்திரையால் மூடப்பட்டதுபோல் காட்சி அளிக்கிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே, காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் சில நாட்கள் பனிமூட்டம் நீடிக்கும் என டெல்லி வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் பனி கொட்டி வருகிறது. காலை வேளைகளில் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் செல்லும் அளவுக்கு பனிபெய்து வருகிறது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பகுதியிலும் உறைபனி பெய்ததால் ஓடுதளம் பகுதி இருண்டு காணப்பட்டது.
ஓடுதளம் பகுதியில் தெளிவான காட்சி இல்லாததால் நேற்று வெள்ளிக்கிழமை 140க்கும் அதிகமான விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரத்தில் தாமதம் ஏற்பட்டது. 9 சர்வதேச விமானச்சேவைகள் 4 உள்ளூர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக வியாழக்கிழமையும் 200க்கும் அதிகமான விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரத்தில் தாமதம் ஏற்பட்டது. 16 விமானச்சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல், டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படவேண்டிய 41 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு வந்துசேர வேண்டிய 81 ரயில்கள் காலதாமதமாக வந்துசேரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.