உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.... 9 பேர் பலி
அமேதி: உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பேருந்து ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 9 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி மாவட்டம் பெபார்பூர் பகுதியில் சுல்தான்பூரை நோக்கி 42 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ராம்கோவான் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்து தீப்பிடித்தது.
பேருந்தின் என்ஜினில் பிடித்த தீ மளமளவென பரவியது. ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த பயணிகள் சிலர், ஜன்னல் கதவுகளை உடைத்து உயிர் தப்பினர். ஆனபோதும், தீயின் கோர நாக்குகளுக்கு 9 பயணிகள் பலியாயினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இறந்தவர்கள் சடலங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பேருந்தின் என் ஜினில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.