அதிர வைத்த கொல்லம் கொடூரம்... புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பலாத்காரம்!
கொல்லம்: புற்று நோயால் பாதிக்கப்பட்ட 90 வயதான மூதாட்டி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில மனித உரிமை கமிஷன் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் கடக்கல் பகுதியில், தனது கணவரை இழந்து கடந்த 20 வருடங்களாக தனிமையில் வசித்துவருகிறார் இந்த மூதாட்டி. இவரை, பாபு என்பவர் கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
இந்த சம்பவத்தில் அந்த மூதாட்டி காயமடைந்துள்ளார். வீட்டின் பின்கதவு வழியாக வீட்டின் உள்ளே நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி என்னைப் பலாத்காரம் செய்தான். என்னைத் துன்புறுத்த வேண்டாம் என அவனிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால், அவன் கேட்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் அந்த மூதாட்டி
இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்து ஒருவாரங்களுக்கு மேல் ஆகியுள்ளது. ஆனால், இன்றுதான் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உறவினர்கள் அவருக்கு முறையான சிகிச்சை மற்றும் சட்ட உதவி கொடுக்கத் தயாராக இல்லாததால், சம்பவம் தாமதமாக வெளிவந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
தற்போது முதலகட்ட விசாரணைக்குப் பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். விரைவில், குற்றவாளி கைதுசெய்யப்படுவான் என கொல்லம் ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அஜிதா பேகம் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மூதாட்டி இந்த பலாத்கார சம்பவத்தின்போது காயமடைந்ததாக தெரியவந்துள்ள நிலையில் இதுதொடர்பாக, அம்மாநில மனித உரிமை கமிஷன் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஆறுமாத குழந்தைகள் முதல் 90 வயது மூதாட்டிகள் வரை இன்றைக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற கொடூர காமுகர்களுக்கு சரியான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.