கேரளாவில் 9,000 பேருக்கு டெங்கு காய்ச்சல்.. சுகாதாரத் துறை பகீர் ரிப்போர்ட்
கேரள மாநிலத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் இருக்கிறது.
டெல்லி: நடப்பாண்டு கணக்குப்படி இந்தியா முழுவதும் 18,700 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவரம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் 9,606 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 17 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கேரளா டெங்குவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் ஜூலை 2ம் தேதி வரை 4174 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கர்நாடகத்தில் 1,945 பேரும், குஜராத்தில் 616 பேரும், ஆந்திராவில் 606 பேரும், மேற்கு வங்கத்தில் 469 பேரும், டெல்லியில் 100 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே போன்று இந்தியா முழுவதும் சுமார் 10,952 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. இந்தக் காய்ச்சலுக்கு கர்நாடகாவில் 4,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கர்நாடக மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.