மோடிக்கு ஆதரவு தந்த 92% மக்கள் பதிலளித்த அந்த 10 கேள்விகள் இதுதான்!
டெல்லி: ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, செல்போன் ஆப் மூலம் எழுப்பிய கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பொதுமக்களில், 92 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்கள், பிரதமர் மீது கோபத்தில் இருப்பதாக ஊடகங்களும், எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டு வரும் நிலையில், மக்கள் மனநிலையை அறிந்து கொள்ள ஆப் மூலம் கருத்து கணிப்பு நடத்தினார் மோடி.
'நரேந்திரமோடி' என்ற பெயரிலான இந்த ஆப்பில் மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
அந்த கேள்விகள் இவைதான்:
1) இந்தியாவில் கருப்பு பணம் உள்ளது என நீங்கள் நினைக்கிறீர்களா?
2) கருப்பு பணம் மற்றும் ஊழலால் ஏற்படும் தீமையை எதிர்த்துப் போராடி அதை ஒழிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
3) கருப்புப் பணத்திற்கு எதிராக இந்த அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?
4) ஊழலுக்கு எதிராக தற்போதைய மத்திய அரசு எப்படி செயல்பட்டுள்ளது என்று நினைக்கிறீர்கள்?
5) புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்தது பற்றி உங்கள் எண்ணம்?
6) அரசின் இந்தத் தடை நடவடிக்கையால் கருப்புப் பணம், தீவிரவாதம் மற்றும் ஊழல் குறையும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
7) அரசு நடவடிக்கையால், சாதாரண மக்களுக்கும் இனிமேல், உயர்கல்வி, மருத்துவம் சென்றடையும் என்று கருதுகிறீர்களா?
8) கருப்பு பணத்தை அழிப்பதற்கான போராட்டத்தில் ஏற்படும் துன்பங்களை நீங்கள் பொருட்படுத்திக் கொள்கிறீர்களா?
9) ஊழலை எதிர்ப்போம் என கூறுபவர்கள், அரசு நடவடிக்கையை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
10) பிரதமருக்கு நீங்கள் ஏதாவது ஆலோசனை-பரிந்துரை கூற விரும்புகிறீர்களா?
இந்த கேள்விகள்தான் ஆப்பில் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு விடையளித்த மக்களில் 92 சதவீதம் பேர் மோடி அரசின் நடவடிக்கை வெகு சிறப்பு/சிறப்பு என கருத்து கூறியிருந்தனர். கருத்து கணிப்பில் மொத்தம் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உலகின் பல்வேறு நகரங்களில் இருந்தும் கலந்து கொண்டனர். ஒரு நிமிடத்திற்கு 400 பேர் என்ற சராசரியில் மக்கள் ஆர்வமோடு பங்கேற்றுள்ளனர்.
98 சதவீத மக்கள், கருப்பு பணம் இந்தியாவில் இன்னமும் உள்ளதாகவும், 99 சதவீதம் மக்கள் கருப்பு பணம், ஊழல் கொடுமைகளை முற்றிலும் ஒழித்து எறிய வேண்டும் எனவும் கருத்து கூறியுள்ளனர்.
பண மதிப்பு ஒழிப்பு நடவடிக்கையால், ரியல் எஸ்டேட், உயர் கல்வி, மருத்துவ வசதிகள் சாமானியர்களுக்கும் கிடைக்கும் என்பதில் முழு நம்பிக்கையுள்ளதாக 66 சதவீதம் பேரும், ஓரளவுக்கு நம்பிக்கையுள்ளதாக 27 சதவீதம் பேரும், கருத்து கூற கஷ்டம் என 6 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.