கொளுத்தும் வெயில்... உருகும் தார் சாலைகள்... வழுக்கும் வாகனங்கள்...இங்கல்ல குஜராத்தில்!
அகமதாபாத்: குஜராத்தில் வெயிலின் கொடுமையால், தார் சாலைகள் உருகத் தொடங்கியுள்ளன. இதனால் மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
கடந்தாண்டை விட இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகம். இதனால் வெளியே செல்லவே அஞ்சி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் வெயில் அதிகமாக இருப்பதால், அங்குள்ள தார் சாலைகள் உருகிக் காணப்படுகின்றன.
விபத்துகள்...
இதனால் அப்பகுதி சாலையில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதேபோல், சாலையில் நடந்து செல்வோரும் உருகிய தாரில் செருப்பு மாட்டிக் கொண்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
கொளுத்தும் வெயில்...
வல்சாத் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ஆமதாபாத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இதுவரை பதிவானதிலேயே அதிகபட்ச வெயில் பதிவானது. அதாவது அங்குள்ள பாலோடி என்ற இடத்தில் அதிகபட்சமாக 123.8 டிகிரி வெயில் பதிவானது.
கேரளாவில்...
இதேபோல், 85 ஆண்டுகளில் இல்லாத அளவு, இந்த ஆண்டுதான் பெங்களூரில் அதிக பட்ச வெப்ப நிலை பதிவாகி உள்ளது.கேரளாவில் கடந்த 29 ஆண்டுகளில் பதிவாகாத 41.8 டிகிரிச் செல்சியஸ் வெயில் பதிவாகி உள்ளது.
தலைநகரில்...
இவ்வாறு வெயிலுக்கு தார் சாலைகள் உருகுவது இது முதன்முறையல்ல, கடந்த ஆண்டு கத்தரி வெயில் உச்சத்தில் இருந்த மே மாதத்தில் டெல்லியில் உள்ள சில பகுதிகளில் தார் சாலை உருகி வழிந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.