வேட்டி அணிவோரை தடுப்பது வெட்கக் கேடானது.. ஏ.கே.அந்தோணி சாடல்
டெல்லி: தமிழகத்தின் தலைநகரில் வேட்டி கட்டிச் சென்ற ஒரே காரணத்திற்காக தடுத்து நிறுத்தப்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களையும் கொந்தளிக்க வைத்துள்ள விவகாரத்தில் இந்த செயலில் ஈடுபட்ட சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு கேரள மூத்த அரசியல்வாதியும், முன்னாள் முதல்வருமான ஏ.கே.அந்தோணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வேட்டிக்கு அனுமதி மறுத்திருப்பது கசப்பான செய்தி. கிளப்களில் வேட்டி அணிந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறுவது வெட்கக் கேடானது.
இதனை நான் எதிர்க்கிறேன். இதனை ஒழிக்க வேண்டும். அத்தகைய விதிமுறையை முற்றிலும் நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நீதிபதி பக்கம்தான் நான் நிற்கிறேன். எனது ஆதரவு அவருக்கு தான் என்று அந்தோணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் வேட்டிதான் பாரம்பரிய உடையாகும். ஆனால் தமிழகத்தில்தான் வேட்டிக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. மாறாக, கேரளாவில் வேட்டியை மறக்காமல், அதன் பாரம்பரியத்தை, கம்பீரத்தை, கெளரவத்தை விட்டுக் கொடுக்காமல் கட்டிக் காத்து வருகிறார்கள். அதை விட முக்கியமாக பேன்ட் சட்டையில் போவதை விட வேட்டி சட்டையில் போவோருக்குத்தான் அங்கு மரியாதையும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.