தினகரனுக்கு முற்றுகிறது நெருக்கடி... இரட்டை இலை பெற லஞ்சம்... டெல்லி வழக்கில் புதிய பிரிவு சேர்ப்பு
இரட்டை இலை சின்ன விவாகரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் டிடிவி தினகரன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
டெல்லி: இரட்டை இலை பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில், மேலும் ஒரு புதிய பிரிவை சேர்த்துள்ளனர் போலீசார்.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தனர். 35 நாட்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு விசாரணையை டெல்லி போலீசார் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக ஆதாரங்களை ஆய்வு செய்து பட்டியலிட்டு வருகிறார்கள்.
டெல்லி ஹோட்டலில் பிடிபட்ட இடைத்தரகர் சுகேஷிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தபோது எம்.பி. என்ற பெயரில் போலி அடையாள அட்டை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த போலி எம்.பி. அடையாள அட்டையைப் பயன்படுத்தி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் நாடாளுமன்றத்துக்குள் சர்வ சாதாரணமாக சென்று வந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து டி.டி.வி. தினகரன் மீது டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் புதிய பிரிவு ஒன்று கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 , அதாவது மதிப்புமிக்க பாதுகாப்பு ஏற்பாட்டில் போலியை உருவாக்குதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
தினகரன் வழக்கில் இந்த புதிய பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி நீதிபதிகள், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்க முடியும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
அது மட்டுமின்றி இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் குற்றப்பத்திரிகை தயாரித்து தாக்கல் செய்ய போதுமான கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளவும் இந்த புதிய சட்டப்பிரிவு வழிவகை செய்வது கவனிக்கத்தக்கது.