மோடி போல் வேடமிட்டவர் சாட்டையால் அடிப்பது போல் விவசாயிகள் நூதன போராட்டம்!
டெல்லியில் மோடி போல் வேடமிட்டவர் சாட்டையால் அடிப்பது போல் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி: தமிழக விவசாயிகள் டெல்லியில் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று 36வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி போல் வேடமிட்டவர் விவசாயிகளை சாட்டையால் அப்பது போன்று சித்தரித்து விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் கடந்த 14ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
எலிக்கறி உண்பது, பாம்புக்கறி உண்பது, சேலை கட்டுவது, பிச்சையெடுப்பது, மண்சோறு சாப்பிடுவது, மண்டைஓட்டை ஏந்தியிருப்பது. போட்டை அழிப்பது, பெண் வேடமிடுவது என நாள்தோறும் பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திலும் போராட்டம்
தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வாய்திறக்காம அரசுகள்
ஆனால் விவசாயிகளின் போராட்டம் குறித்து இதுவரை மத்திய மாநில அரசுகள் வாய் திறக்கவில்லை. விவசாயிகளை சந்திக்கும மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் போராட்டத்தை கைவிட வலியுறுத்துகின்றனறே தவிர கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து வாய்திறக்க மறுத்து வருகின்றனர்.
36வது நாளாக போராட்டம்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று 36வது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர் விவசாயிகள்.
சாட்டையால் அடிப்பது போன்று சித்தரிப்பு
கோவணத்துடன் அரைநிர்வாணமாக போராடி வரும் அவர்களை மோடி போல் வேடமிட்டவர் சாட்டையால் அடிப்பது போன்று இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் தங்களை காப்பாற்றுங்கள் என கதறுவது போன்றும் சித்தரித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.