ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ. ராசா முழுமையான பொய்யர்... டெல்லி கோர்ட்டில் சி.பி.ஐ.
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் குறித்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தவறான தகவல்களைத் தொடர்ந்து தெரிவித்து, முழுமையான பொய்யர் ஆக முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா செயல்பட்டார் என்று டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கின் இறுதி வாதங்களை சி.பி.ஐ. சார்பில் அதன் சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் கடந்த சில நாட்களாக முன்வைத்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று அவர் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் முன்வைத்த வாதம்:
பொய் தகவல்
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது "முதலில் வருவோருக்கு முன்னுரிமை" என்ற கொள்கையை அமல்படுத்தும் நடைமுறைக்கு அப்போதைய சொலிசிட்டர் ஜெனரல் வாகனவதி, மத்திய அமைச்சர்கள் குழுவுக்கு தலைவராக இருந்த அப்போதைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் ஒப்புதல் தெரிவித்ததாக, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ராசா தகவல் அளித்தார்.
இதை கடிதம் மூலமும் ராசா கூறியுள்ளார். ஆனால், உண்மையில் சொலிசிட்டர் ஜெனரலோ மத்திய அமைச்சர்கள் குழுத் தலைவரோ ஒப்புதலே தெரிவிக்கவில்லை.
வாக்குமூலம்
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை கோரி வந்த விண்ணப்பங்களுக்கான இறுதித் தேதியை நிர்ணயிக்கும் நடவடிக்கையில் ராசா அப்போதைய தொலைத்தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெஹுராவுடன் சேர்ந்து மோசடியாக ஒரு பத்திரிகை செய்தியை தயாரித்ததாக மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் உயரதிகாரி நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.
கேள்வி
அந்த பத்திரிகை செய்தியை சொலிசிட்டர் ஜெனரலுக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் ஒரு அமைச்சருக்கு ஏன் வர வேண்டும்? என்ற நியாயமான கேள்வியையும் அவர் தனது வாக்குமூலத்தில் எழுப்பியுள்ளார்.
முழு பொய்யர்
இதை வைத்து பார்க்கும்போது, ஏதோ ஒரு நோக்கத்துக்காக ராசா தொடர்ந்து பிரதமருக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தவறான தகவலை ராசா அளித்துள்ளது நிரூபணமாகிறது. இதன் மூலம் அவர் முழுமையான பொய்யர் ஆக திகழ்ந்ததும் தெளிவாகிறது
இவ்வாறு ஆனந்த் குரோவர் வாதிட்டார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 7-ந் தேதிக்கு சிறப்பு நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.