வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை போட்டோ எடுத்த 10ஆம் வகுப்பு மாணவர் போலீஸாரால் தாக்கப்பட்ட கொடூரம்!
வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை போட்டோ எடுத்த 10ஆம் வகுப்பு மாணவர் போலீஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெகபூநகர்: தெலுங்கானாவில் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியரை போட்டோ எடுத்து கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்பிய மாணவர் போலீஸாரால் பள்ளி வளாகத்துக்குள்ளேயே தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெகபூநகரில் இயங்கி வரும் பள்ளியில் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கியுள்ளார். இதனைக் கண்ட மாணவர் ஒருவர் தனது மொபைல் போனில் போட்டோ எடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அந்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த 2 போலீசார் அந்த மாணவனை பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர்.
பள்ளி வளாகத்துக்குள்..
ஆசிரியர்களின் கண் முன்னே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மாணவன் பள்ளிக்கூட வளாகத்திற்குள்ளேயே குடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடல் முழுவதும் காயம்
ஆனால் இதனை மறுத்துள்ள மாணவர் கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்ததாக தெரிவித்துள்ளார். போலீசார் அடித்ததில் அந்த மாணவனின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
வேடிக்கை பார்த்த ஆசிரியர்கள்
தான் போலீசாரால் பள்ளி வளாகத்துக்குள் தாக்கப்படுவதை ஆசிரியர்கள் வேடிக்கை பார்த்ததாக பாதிக்கப்பட்ட மாணவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தன்னுடன் அமர்ந்து கூல்ட்ரிங்ஸ் குடித்த மற்ற சக மாணவர்கள் போலீஸிடம் இருந்து தப்பி விட்டதகாவும் அவர் கூறினார்.
சக ஆசிரியர்களின் ஏற்பாடு
வகுப்பறையில் ஆசிரியர் தூங்கியதை போட்டோ எடுத்து உயர் அதிகாரிக்கு அனுப்பியதாலேயே சக ஆசிரியர்கள் மாணவரை தாக்க போலீசாரை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.