காவிரி விவகாரத்தில் கர்நாடகா ஆதரவு நிலையில் மத்திய அரசு.. நிபுணர் குழு கோரும் உமாபாரதி!
டெல்லி : காவிரி விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர்இருப்பு மற்றும் மழை அளவு குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க மத்திய அமைச்சர் உமாபாரதி பரிந்துரைத்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் இருமாநில அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது. உண்மை நிலையை அறிய மத்திய அரசு நிபுணர் குழு அனுப்பி ஆராய வேண்டும். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் கர்நாடகவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். 2015-16ம் ஆண்டு நீர்பருவ ஆண்டு மிக மோசமாக உள்ளது என்று பேசினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உரையை வாசித்த தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவ், தமிழகத்திற்கு காவிரியில், தண்ணீர் தர மறுப்பது அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்று கூறினார். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். டெல்டா பகுதியில் ஒரு போக சம்பா பயிரையாவது காப்பாற்ற தண்ணீர் திறப்பது அவசியமாகும்.
உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்கவில்லை. நீர் தர மறுப்பதை நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த கர்நடகா அனுமதித்துள்ளது. கர்நாடகாவில் தமிழர்கள் அவமதிக்கப்படுகின்றனர். கோர்ட் உத்தரவுப்படி தண்ணீர் தருவதை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கூறினார்.
இரு மாநில முதல்வர்களின் உரையை கேட்ட உமாபாரதி, கர்நாடகாவிற்கு ஆதரவான நிலைப்பாடு ஒன்றை எடுத்துள்ளார். அது இரு மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர் இருப்பைக் கண்டறிய மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்த குழு அணைகளின் நீர் இருப்பைக் கண்டறிவதோடு, மழை அளவு குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி பரிந்துரைத்துள்ளார்.
இது காலம் கடத்தும் செயல் என்பது தமிழக அதிகாரிகளின் வாதமாகும். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா, கடந்த சில மாதங்களாகவே இந்த வாதத்தை முன் வைத்து வருகிறது. இன்று பேசிய சித்தராமைய்யாவும் இதே வாதத்தை முன்வைத்தே பேசினார். அதை கருத்தில் கொண்டே உமாபாரதி கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
அதேநேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்தும், தமிழக அரசின் கோரிக்கையையும் உமாபாரதி பரிசீலனை செய்ததாகவே தெரியவில்லை என்றும் தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.